search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவாரூர் தொகுதி"

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சொந்த தொகுதியான திருவாரூர் தொகுதியை தி.மு.க. மீண்டும் வெற்றியை தக்க வைத்து கொண்டது தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன், அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.ஜீவானந்தம், அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.காமராஜ், மக்கள்நீதி மய்யம் வேட்பாளர் அருண் சிதம்பரம், நாம் தமிழர் வினோதினி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல், கடந்த ஏப்ரல் 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுடன் நடைபெற்றது.

    வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு எந்திரங்கள் அனைத்தும் திருவாரூர் திரு.வி.க.கல்லூரியில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் கண்காணிப்பு கேமிராக்கள், 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது.

    இதையடுத்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை திரு.வி.க. கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    முன்னதாக காலை 7 மணியளவில் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் வந்தனர். மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர், துணை தேர்தல் அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. 4 சுற்று முடிவில் எண்ணப்பட்ட வாக்குகள் விவரம்:-

    பூண்டி கலைவாணன் (தி.மு.க.)-18,891

    ஆர்.ஜீவானந்தம் (அ.தி.மு.க.)-9,892

    எஸ்.காமராஜ் (அ.ம.மு.க.)-3166

    அருண் சிதம்பரம் (மக்கள் நீதி மய்யம்):-538

    வினோதினி (நாம் தமிழர்):-1249

    மறைந்த தி.மு.க. தலைவர் சொந்த தொகுதியான திருவாரூர் தொகுதியை தி.மு.க. மீண்டும் வெற்றியை தக்க வைத்து கொண்டது தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    திருவாரூர் பகுதியில் தி.மு.க. நிர்வாகிகள் ஆங்காங்கே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மேலும் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
    இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள திருவாரூர் தொகுதி மக்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் இப்போதே அளிக்கப்படவுள்ள நிலையில் சிலரது மனநிலை மட்டும் வேறுவிதமாக உள்ளது. #Thiruvarurbyelection
    திருவாரூர்:

    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தமிழக அரசு அறிவித்த பொங்கல் ரொக்கப்பரிசு ஆயிரம் ரூபாய் திருவாரூர் தொகுதி மக்களுக்கு தேர்தலுக்குபின் அளிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இடைத்தேர்தல் இன்று ரத்து செய்யப்பட்டதால் திருவாரூர் தொகுதிக்குட்பட்ட மக்களின் குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதனால் முன்னர் பொங்கல் பரிசு உரிய நேரத்தில் கிடைக்காமல் போனதே... என்று கவலைப்பட்ட திருவாரூர் தொகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



    ஆனால், ‘நோட்டுக்கு ஓட்டு’ என்ற கொள்கையை தவறாமல் கடைபிடிக்கும் ஒருசிலர் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி-தோல்வியை பணம்தான் நிர்ணயித்து தந்தது என பரவலாக பேசப்பட்டது. இதேபோல், தி.மு.க. தலைவர் கருணாநிதி வெற்றி பெற்ற தொகுதியை தக்கவைத்து கொள்ள அக்கட்சியினரும், அந்த தொகுதியை தட்டிப்பறிக்க பிறகட்சிகளும் கடுமையான பலப்பரீட்சை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆளும் அ.தி.மு.க.வுக்கு இந்த இடைத்தேர்தல் அமிலப்பரீட்சையாகவும், எதிர்க்கட்சியான தி.மு.கவுக்கு கவுரவ பிரச்சனையாகவும் பார்க்கப்பட்டது.

    கொள்கை, வேட்பாளர் என்ற எல்லைகளையும் கடந்து இங்கும் பணம்தான் கதாநாயகனாக விளையாடும் என பரவலான கருத்து நிலவியது. ஒரு ஓட்டுக்கு குறைந்தது ஐயாயிரம் ரூபாய்வரை கிடைக்கலாம் என்னும் ஆதங்கமும் தலைதூக்கியது.

    இந்நிலையில் இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது சிலரின் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது.

    குடும்ப அட்டைக்கு அரசு அளிக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசை இடைத்தேர்தல் முடிந்த பிறகு பிப்ரவரி மாதத்தில் வாங்கி கொள்ளலாம். ஆனால், ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தை வாங்க இன்னும் எத்தனை மாதம் காத்திருக்க வேண்டுமோ? என அவர்கள் தவிக்கின்றனர்.

    இதற்கேற்ப, ‘டோக்கன் கொடுத்து ஓட்டு வாங்க காத்திருந்த ஊழல் கட்சிகளுக்கு வேண்டுமானால் திருவாரூர் இடைத்தேர்தல் நடக்காதது ஏமாற்றம் அளிக்கலாம்’ என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தெரிவித்துள்ள கருத்து எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்த்ததுபோல் அவர்களின் வயிற்றெரிச்சலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

    பத்து பேர் கொண்ட குடும்பமானாலும் அரசு அளிக்கும் பொங்கல் ரொக்கப்பரிசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும்தான். ஆனால், அந்த குடும்பத்தில் 4 வாக்காளர்கள் இருந்தால் போதும் தலைக்கு ஐயாயிரம் என்றால் சுளையாக இருபதாயிரம் ரூபாய் கிடைத்திருக்குமே! என சிலர் புலம்புகின்றனர். #Thiruvarurbyelection 
    ஜனவரி 28ந் தேதி நடப்பதாக இருந்த திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக விரிவான விபரங்கள் வெளியாகியுள்ளது. #ThiruvarurByElection #ElectionCommission

    சென்னை:

    கருணாநிதி மரணம் காரணமாக 7-8-2018 முதல் திருவாரூர் சட்டசபை தொகுதி காலி இடமாக உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி காலியாக உள்ள தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் அதாவது 6-2-2019க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஜனவரி 3-ந்தேதி அறிவிக்கை வெளியிட்டது. 28-ந்தேதி ஓட்டுப்பதிவு நடத்துவதற்கு ஏற்ப தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது.

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடந்த 3-12-2018 அன்று தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர் கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடும் பேரிழவு ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். விவசாய பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் அழிந்ததோடு 6 லட்சம் வீடுகள், 1½ லட்சம் மின் கம்பங்கள் சேதம் அடைந்து இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

    கஜா புயல் பாதித்த 12 மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டமும் ஒன்று என்றும், அங்கு நிவாரணப் பணிகள் முடிந்து முழுமையான இயல்பு நிலை திரும்ப குறைந்தது 3 மாதங்கள் ஆகும் என்றும் கூறி இருந்தார். எனவே திருவாரூர் தொகுதிக்கு 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு இருந்தார்.

    மேலும் தலைமைச் செயலாளர் தனது கடிதத்தில், காலி இடமாக உள்ள மேலும் 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். தமிழக அரசு தலைமை செயலாளரின் இந்த கடிதத்தை மத்திய உள்துறைக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி கருத்து கேட்டது.

    அதை ஏற்று கடந்த 31-12-2018 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்து இருந்தது. அதில், “தமிழ்நாட்டில் நவம்பர் 15-ந்தேதி தாக்கிய கஜா புயலில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த பகுதிகளில் மாநில அரசு மூலம் நிவாரணப் பணிகள் நடந்து வருகிறது” என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 2-1-2019 அன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு இ.மெயில் மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தார். திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார். மறுநாள் 3-1-2019 அன்று அவர் தேர்தல் கமி‌ஷனரை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தார்.

    மேலும் கஜா புயல் தாக்குதல் காரணமாக மாநில அரசு அதிகாரிகள் அனைவரும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் தற்காலிகமாக மற்றொரு மாவட்டத்துக்கு இடம் பெயர்ந்து உள்ளனர். இதுபற்றி தலைமை தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டது. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யலாம் என்று கூறி இருந்தார்.

     


    இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திருவாரூரில் தேர்தல் நடத்த உகந்த சூழ்நிலை உள்ளதா? என்று கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட தேர்தல் அதிகாரி திருவாரூரில் கடந்த 5-1-2019 அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து கருத்து கேட்டார்.

    பா.ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. ஆகியவை உள்பட பல்வேறு கட்சிகள் திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டன. கஜா புயல் நிவாரப்பணிகள் நடந்து வருவதால் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று இந்த கட்சிகள் கோரிக்கை விடுத்து இருந்தன.

    இது தொடர்பாக கடந்த 6-1-2019 அன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமான அறிக்கை ஒன்றை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருந்தார். அதில் கூறி இருந்ததாவது:-

    1. கஜா புயலால் இடம் பெயர்ந்துள்ள பட்டியலை தயாரிக்க மாநில நிர்வாகத்துக்கு கூடுதல் அவகாசம்.

    2. கஜா புயல் நிவாரணப் பணிகள் பாதிதான் முடிந்து உள்ளன. முழுமையாக முடிக்க அவகாசம் வேண்டும். நிவாரணப் பணிகளில் உள்ள அதிகாரிகள்தான் தேர்தல் பணிகளை செய்ய வேண்டி உள்ளது.

    3. தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாள் தேர்தல் சமயத்தில் வருகிறது.

    4. டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை நடைபெற உள்ளது. அந்த சமயத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட வேண்டி உள்ளது. அந்த சமயத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீற வாய்ப்பு உள்ளது.

    5. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

    6. இந்த சூழ்நிலையில் வியாபாரிகளும் இடைத்தேர்தல் நடத்தப்படுவதை விரும்பவில்லை.

    7. தமிழ்நாட்டில் பள்ளிகளில் பொதுத்தேர்தவு 2 வாரங்களில் நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் ஆசிரியர்களை தேர்தல் அதிகாரிகளாக பணியாற்ற வைப்பதில் இடையூறு உள்ளது.

    8. இத்தகைய சூழ்நிலையில் பொதுமக்கள் தேர்தல் நடைமுறைகளில் ஆர்வமுடன் தீவிரமாக பங்கேற்கமாட்டார்கள்.

    9. மேலும் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளிடமும் கருத்து கேட்டபோது அனைத்து கட்சிகளும் தேர்தலை நடத்த வேண்டாம் என்றும் ஒத்திவைக்க கோரியும் கருத்து தெரிவித்து உள்ளன.

    இவ்வாறு தமிழக தேர்தல் அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    கஜா புயலால் திருவாரூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் செய்ய வேண்டி இருப்பதை மாவட்ட கலெக் டர் மூலம் தெரிய வந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு தற்போது திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை சுமூகமாக நடத்த முடியாது என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்தது.

    எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் -1951 பிரிவு 150, 30, 56 மற்றும் அரசியல் சட்டப்பிரிவு 326, பொது காரணங்கள் சட்டப்பிரிவு 21 ஆகியவற்றின் அடிப்படையில் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. இதன் விளைவாக திருவாரூர் தொகுதி மாவட்ட தேர்தல் அதிகாரி இதுவரை மேற்கொண்டு இருந்த தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும், நடவடிக்கைகளும் செல்லாது என்று அறிவிக்கப்படுகிறது.

    தமிழக அரசின் கடிதம் மற்றும் கட்சிகளின் கருத்து அடிப்படையில் திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து ஆகிறது. திருவாரூர் தொகுதியில் சுமூகமாக, நியாயமாக, அமைதியாக தேர்தல் நடத்த உகந்த சூழ்நிலை உருவான பிறகு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையர்களின் உத்தரவில் தெரிவிக்கபட்டுள்ளது.

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை விரிவாக பார்க்கலாம். #TiruvarurByElection
    சென்னை:

    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெற இருந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கஜா புயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்தது.

    இந்த அறிவிப்பு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கூறியதாவது:

    திருவாரூர் தேர்தலை இன்முகத்துடன் வரவேற்க தயாராக இருந்த நிலையில் ரத்தாகி விட்டது. தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏமாற்றமளிக்கிறது என்று தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

    மாவட்ட தேர்தல் அதிகாரி நடத்திய கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளும் தேர்தலை எதிர்த்தன. கஜா புயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. பாஜக உள்நோக்கத்துடன் இடைத்தேர்தலை அணுகியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார்.

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை ரத்து செய்தது சரியான நடவடிக்கையே. எனது கணிப்பின் அடிப்படையில் திருவாரூர் தேர்தல் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்றேன். புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது தேவை நிவாரணம்தான் தேர்தல் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார்.

    முதல்வரை பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சந்தித்தபோதே தேர்தல் ரத்து முடிவாகிவிட்டது. திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என்று  காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

    இதேபோல் திருவாரூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பை விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    தேர்தல் ரத்து அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக திருவாரூர் தொகுதியில் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ். காமராஜ்  கூறினார். இடைத்தேர்தல் திட்டமிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

    அதிமுக, பாஜக நடவடிக்கைகளை வைத்தே தேர்தல் ரத்தாகும் என முன்கூட்டியே கணிக்க முடிந்ததாக தி.மு.க. வேட்பாளரான பூண்டி கலைவாணன் கருத்து தெரிவித்துள்ளார்.

    மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டு தேர்தலை ரத்து செய்துள்ளன என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாகுல் அமீது கூறினார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    மேலும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  #TiruvarurByElection 
    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெற இருந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. #Thiruvarur #ThiruvarurByElection #ElectionCommission
    திருவாரூர்:

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது திருவாரூர் தொகுதியில் முன்னாள் முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி இரண்டாவது தடவையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அந்த தேர்தலில் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை விட கூடுதலாக 68 ஆயிரத்து 316 வாக்குகள் பெற்றார். திருவாரூர் தொகுதியில் முதன் முதலாக 2011-ம் ஆண்டு களம் இறங்கிய போதும் அவர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி உடல் நலக்குறைவு காரணமாக கருணாநிதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. சட்ட விதிகளின்படி திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 5-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தலைமை தேர்தல் ஆணையம் இதுபற்றி ஆலோசித்து வந்தது.

    தமிழ்நாட்டில் திருவாரூர் தொகுதி தவிர திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளும் காலியாக இருப்பதால் 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருப்பதாலும், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அப்பீல் செய்ய அவகாசம் இருப்பதாலும் அந்த 19 தொகுதிகளின் தேர்தலை சற்று தாமதித்து நடத்தலாம் என்று தலைமை தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்தது.

    இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்துமாறு தமிழக தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    கஜாபுயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
    திருவாரூர் தேர்தலுக்கு எதிரான மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.   #Thiruvarur #ThiruvarurByElection #ElectionCommission
    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கி உள்ளதால் அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி உள்ளனர். #Tiruvarurconstituency #Tiruvarurbyelection
    திருவாரூர்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையடுத்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் கமி‌ஷன் கடந்த 31-ந்தேதி அறிவித்தது. இதனால் அன்று முதலே திருவாரூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது.

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆர்.டி.ஓ முருகதாஸ் தேர்தல் நடத்தும் அலுவலராகவும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் திருமால் மற்றும் திருவாரூர் தாசில்தார் குணசீலி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் வேட்பு மனுதாக்கல் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இன்று (3-ந்தேதி) முதல் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதற்காக இந்த அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பும், பேரிகார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் நடத்த விதிகளை கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் துணை தாசில்தார், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் வீடியோ கிராபர் இடம் பெற்றுள்ளனர். பறக்கும் படையில் மத்திய அரசு அலுவலர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.

    வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கி உள்ளதால், அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி உள்ளனர்.

    பிரதான கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வேட்பாளர்கள் தேர்வில் இறங்கியுள்ளன. நேர்காணல் நடத்தி இந்த இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த பிறகே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கும்.

    தினகரன் கட்சியிலும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தினகரன் கட்சி வேட்பாளர் யார்? என அறிவிக்கப்பட்டு விடுவார்.

    அதன் பிறகே திருவாரூர் தொகுதியில் அ.தி.மு.க.- தி.மு.க. -அ.ம.மு.க. கட்சிகளின் மும்முனை போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று வேட்பு மனுதாக்கல் செய்யும் வேட்பாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    வேட்பு மனு தாக்கல் ஊர்வலம் குறித்து முன்னதாகவே உரிய முடிவு செய்து அனுமதி பெற வேண்டும். தேர்தல் அலுவலகம் முன்பு 200 மீட்டர் தூரத்துக்கு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் முன்மொழிபவர் உள்பட 6 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    இன்று தொடங்கும் வேட்பு மனு தாக்கல் முதல் நாளில், சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்புமனு வாபஸ் பெற வருகிற 14-ந்தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    அதன் பின்னரே அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும். தொகுதி முழுவதும் தலைவர்கள், அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    இதன் பிறகு வாக்குப்பதிவு வருகிற ஜனவரி 28-ந்தேதி நடைபெறுகிறது. 31-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே அதாவது குறுகிய காலமே உள்ளதால் திருவாரூர் தொகுதியில் அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்ற தொடங்கி விட்டனர். #Tiruvarurconstituency #Tiruvarurbyelection
    திருவாரூர் தொகுதியில் அமைச்சர்கள் கஜா புயல் நிவாரண ஆய்வு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு கூறினார். #Tiruvarurconstituency
    சென்னை:

    திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து அத்தொகுதியில் தேர்தல் நடத்தைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

    இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு கூறியதாவது:-

    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் நடத்தைகளை அமல்படுத்தி தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.



    கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அமைச்சர்கள் புயல் நிவாரண ஆய்வுகள் நடத்த முடியாது. அதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    அனுமதி இல்லாமல் திருவாரூர் தொகுதிக்குள் நுழையும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    புயல் சம்பந்தமாக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிவாரண நிதி, பொருட்கள் ஆகியவற்றை வழங்க எந்த தடையும் இல்லை. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அரசியல் கட்சிகளிடமிருந்து புகார்கள் வந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். விதி மீறி செயல்படும் எந்தவொரு செயலும் தடுக்கப்படும்.

    தேர்தல் ஆணைய சட்ட விதிகளின்படிதான் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 19 தொகுதிகளுக்கு கோர்ட்டின் உத்தரவுகளை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு இருக்கிறது.

    19 தொகுதி தேர்தல் தொடர்பாக அடிக்கடி ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணைய உத்தரவுக்காக காத்து இருக்கிறோம்.

    திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எந்திரங்கள், 303 வாக்குசாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன. வெளிப்படையான, சுமூகமான வாக்குப்பதிவு நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தங்களது வாக்குகளை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

    இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுப்பது போன்றவற்றை தடுக்க தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது. மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள், மத்திய அதிகாரிகள், பண விநியோகத்தை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இது கண்காணிப்பு பணிக்கு மேலும் வலுசேர்க்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Tiruvarurconstituency
    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளதால் மாவட்டம் முழுவதும் 19 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. #thiruvarurelection

    திருவாரூர்:

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 31-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

    இதன் அடிப்படையில் தேர்தல் செலவின கட்டுப்பாடுகளை கண்காணிக்க சட்டமன்ற தொகுதி வாரியாக 9 பறக்கும் படைகள், 6 நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 19 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் திருவாரூர் தொகுதியில் மட்டும் கங்களாஞ்சேரி, கானூர், சோழங்கநல்லூர், கிளரியம் , உத்திரங்குடி, வடபாதிமங்கலம், குடிதாங்கி சேரி, செல்லூர் உள்பட 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த சோதனை சாவடிகளில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 4 போலீசார் கொண்ட குழுவினர் தொடர்ந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை தெரிவித்துள்ளார். அதன்படி திருவாரூரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவாரூர் அருகே காணூரில் உள்ள சோதனை சாவடியில் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் தலைமையில் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன.  #thiruvarurelection

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து அந்த தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. #ThiruvarurByElection
    திருவாரூர்:

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.

    இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (வியாழக் கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 10-ந் தேதி. வேட்பு மனு வாபஸ் பெற 14-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து 28-ந் தேதி ஓட்டுப்பதிவும், 31-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

    தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் அரசியல் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் வாகன சோதனையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    எந்தவித அசம்பாவித சம்பவமும் இன்றி தேர்தலை ஜனநாயக முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான நிர்மல்ராஜ் தெரிவித்தார்.#ThiruvarurByElection
    இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகம். #ThiruvarurByElections
    திருவாரூர்:

    இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகம்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி காலமானார். இதனை தொடர்ந்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் வருகிற 28-ந் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

    திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 31 ஆயிரத்து 169 பெண் வாக்காளர்கள், 18 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 687 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட 3 ஆயிரத்து 669 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

    திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் திருவாரூர், கூத்தாநல்லூர் ஆகிய நகராட்சிகள் உள்ளன. கொரடாச்சேரி பேரூராட்சி மற்றும் மன்னார்குடி, கோட்டூர் உள்ளிட்ட ஒன்றியங்களை சேர்ந்த பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. #ThiruvarurByElections

    திருவாரூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதால் அங்கே நாங்கள் அமோக வெற்றி பெறுவோம் என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். #thangatamilselvan #thiruvarurelection

    அவனியாபுரம்:

    மதுரை விமான நிலையத்தில் அ.ம.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ் செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    செந்தில் பாலாஜி கட்சியை விட்டு சென்றால் அ.ம.மு.க. வில் உள்ள அனைவரும் கட்சியை விட்டு சென்று விடுவார்கள் என்று கூற முடியாது. தேர்தலை சந்திப்போம் என்று எங்கள் பொதுச்செயலாளர் கூறினார்.

    தற்சமயத்திற்கு திருவாரூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. அங்கே நாங்கள் அமோக வெற்றி பெறுவோம். உளவுத்துறை அ.ம.மு.க. தான் வளர்ச்சியடைந்து வருகிறது என தெரிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலோடுதான் இடைத்தேர்தல் நடக்கும். திருவாரூர் மட்டும் நாளை மறுதினம் அறிவிக்க வாய்ப்புள்ளது.

    அலங்காநல்லூரில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் அ.ம.மு.க.வை சேர்ந்தவர் துணைத்தலைவர் ஆவதற்கு செல்லூர் ராஜூ மற்றும் ராஜன்செல்லப்பா உதவியிருக்கலாம். இனி வரும் தேர்தலில் அவர்கள் உதவி செய்தாலும், இல்லையென்றாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #thiruvarurelection 

    திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோற்றால் அ.ம.மு.க.வுடன் இணைய தயாரா? என்று தங்க தமிழ்செல்வன் சவால் விடுத்துள்ளார். #TTVDhinakaran #ADMK #ThangaTamilselvan
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் வருகிற 15-ந்தேதி அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கலந்து கொள்ள உள்ளார். இதற்கான கால்கோல் விழா இன்று நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட டி.டி. வி.தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போது குட்கா விவகாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகையால் குற்றத்திற்கு ஆளான அமைச்சர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் பதவி விலகி தங்களை குற்றமற்றவர் என்று நிரூபித்து அதன் பின்னர் மீண்டும் பதவியில் அமர வேண்டும்.


    ஜெயலலிதாவின் இறப்பு இயற்கையானதே. எங்கள்மீது பழி சுமத்தவே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையம் இதுவரை ஓ.பி.எஸ்.ஐ. அழைத்து விசாரணை செய்யாதது ஏன்? இந்த ஆணையத்தால் உண்மை வெளிவராது.

    குட்கா ஊழல் தொடர்பாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் உண்மையை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மறைத்து விட்டனர். அப்போதே உண்மை தெரிந்திருந்தால் பதவியிலிருந்து அவர்களை தூக்கி இருப்பார்.

    திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் நாங்கள் அவர்களுடன் செல்ல தயார். இதேபோல் நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுடன் அ.தி.மு.க. வர தயாரா என்று சவால் விடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ADMK #ThangaTamilselvan
    ×